பிப். 7 முதல் 11 வரை....இந்தியாவில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சுற்றுப் பயணம்
டெல்லி: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபாய ராஜபக்சே பதவி ஏற்ற உடனே அவருக்கு முதலில் நேரில் வாழ்த்து தெரிவித்தார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். இதனைத் தொடர்ந்து கோத்தபாயவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் கோத்தபாய ராஜபக்சே, தமது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளித்தார் கோத்தபாய ராஜபக்சே.
இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் வருகை தந்தார். அப்போதும் கோத்தபாய ராஜபக்சே அளித்த உறுதி மொழி குறித்து இந்திய தரப்பில் நினைவூட்டப்பட்டது.
ஆனால் அண்மைக்காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.
பிப்ரவரி 7-ந் தேதி முதல் பிப்ரவரி 11-ந் தேதி வரை மகிந்த ராஜபக்சே இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தின் போது வாரணாசாமி, சாரநாத், புத்தக கயா மற்றும் திருப்பதிக்கும் ராஜபக்சே செல்ல உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications