சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை... 5,000 பக்தர்களுக்கு மட்டுமே இந்தாண்டு அனுமதி..!
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மாலை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மகர ஜோதி தரிசனத்துக்காக சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். பொன்னம்பலமேட்டில் தீப ஜோதியாக காட்சி தரும் ஐயப்பனை தரிசிப்பதற்காக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, என கேரளாவை கடந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சபரிமலையில் திரள்வார்கள்.

ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக 5,000 பக்தர்களுக்கு மட்டுமே மகர ஜோதி தரிசனத்துக்கு தேவஸம் போர்டு அனுமதி அளித்துள்ளது. அதுவும் கொரோனா நெகட்டின் என்ற பரிசோதனை சான்றிதழை நிலக்கல் மற்றும் பம்பாவில் அமைக்கப்பட்டுள்ள முகாம் அலுவலர்களிடம் காட்டிய பிறகே அனுமதி தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்தளம் வலியக் கோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் நேற்று புறப்பட்டது. அந்த ஊர்வலம் இன்று மாலை ஐயப்பன் சன்னிதானத்துக்கு வந்து சேரவுள்ளது. இதனிடையே ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் தலைச்சுமையாக எடுத்து வரப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மாலை ஐயப்பனுக்கு சிறப்பு தீபாரதணை நடத்தப்படும். அதைத்தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் 3 முறை ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சி தருவார் என்பது நம்பிக்கை. மகரவிளக்கு பூஜையை ஒட்டி பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சபரிமலை கோயில் தலைமை மேல் சாந்தி வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேல் சாந்தியுடன் தொடர்புடைய 3 பேர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து இவரும் கோரண்டைனில் இருந்து வருகிறார். இருப்பினும் இது மகரவிளக்கு பூஜையை பாதிக்காது என்றும் அதற்கேற்ற மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications