நம்ம சண்டைய பிறகு பார்த்துக்கலாம்.. இப்போ அவங்கள உள்ள விடக்கூடாது.. இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக நுழைவதைத் தடுக்க இடதுசாரி வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாநிலத்தில் பரவலாக அதிருப்தி வாக்குகள் உள்ளன. அவற்றை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளக் கொள்ள பாஜக முயல்கிறது.

இடதுசாரிகளுக்கு நன்றி
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தில் பாஜக நுழைவதைத் தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என்றார். இடதுசாரி நண்பர்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரசாரத்தை முன்னெடுத்ததற்கு நன்றி என்றும் அவர் தெரிவித்தார்.

எங்களுக்கு வாக்களியுங்கள்
அதேநேரம் இடதுசாரிகளால் இந்தத் தேர்தலில் வெல்ல முடியாது என்பதால் அக்கட்சிக்கு வாக்களித்து வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்கக் கூடாது என்றும் இது பாஜகவுக்கு ஆதரவாகப் போய்விடும் என்றும் அவர் கூறினார். இதன் காரணமாக இடதுசாரி வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தங்கள் வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவை உள்ளே விடக்கூடாது
மேற்கு வங்கத்தைப் பிளவுபடுத்தவும், இங்கு நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கவும் விரும்பும் சில அந்நியர்களின் அச்சுறுத்தலை வங்கம் இப்போது கண்டிருக்கிறது. இந்த அச்சுறுத்தலைத் தவிர்க்க வேண்டியது அவசியம். வங்காளத்தின் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து சமூகங்களுக்கும் ஆதரவாக நிற்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன் என்றும் மம்தா பானர்ஜி பேசினார்.

அரசியல் வைரஸ்
மேலும், வங்காளத்தின் மகள் என்பதால் தனது முழு வாழ்க்கையையும் மாநிலத்திலுள்ள பொது மக்களின் நலனுக்காக அர்ப்பணித்துள்ளதாகவும் எப்போதும் இந்த வங்கத்திற்கும் பொதுமக்களுக்கும் கடன்பட்டிருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவை ஒரு அரசியல் வைரஸ் என்று விமர்சித்த அவர், மாநிலத்திலுள்ள சுதந்திரமான அமைப்புகளை பாஜக அழித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இடதுசாரிகள் மறுப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பல திரணாமுல் காங்கிரஸ் தலைவர்களும் பாஜக மாநிலத்தில் நுழைவதைத் தடுக்க இடதுசாரிகள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இந்த கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்துள்ள இடதுசாரி தலைவர்கள் மாநிலத்தில் பாஜக வளர காரணமே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் செயல்பாடுகள் தான் என்று விமர்சித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications