துணை ராணுவ வீரர்கள் மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் பாஜக தடுக்கிறது.. கவர்னரிடம், மம்தா பகீர் புகார்!
கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் துணை ராணுவ படையினர் மூலம் பாஜகவினர் மக்களை ஓட்டு போட விடாமல் தடுக்கின்றனர் என்று மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி புகார் தெரிவித்தார்.
நந்திகிராமில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை பாஜகவினர் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள்.
திரினாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன் உள்பட பலரும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தெரிவித்தனர்.

பரபரப்பான நந்திகிராம் தொகுதி
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 30 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 30 தொகுதிகளில் தேர்தல் நடந்தாலும் அனைவரின் கவனமும் நந்திகிராம் தொகுதியை நோக்கி திரும்பியுள்ளது. அந்த தொகுதியில் மம்தாவின் முன்னாள் ஆதரவாளரும், இந்நாள் எதிரியுமான பாஜக சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று நந்திகிராம் தொகுதியில் களமிறங்கினார் மம்தா பானர்ஜி.

வாக்கு செலுத்திய அதிகாரி
பதற்றமான நந்திகிராம் தொகுதியில் வன்முறை சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க, அங்கு சுமார் 20 பாதுகாப்பு படை குழுக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே காலை முதல் நந்திகிராமில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

பாஜகவினர் மீது புகார்
நந்திகிராமில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை பாஜகவினர் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். மேலும் பல வாக்குச்சாவடிகளை பாஜகவினர் கைப்பற்றி விட்டதாகவும் அவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக திரினாமுல் காங்கிரஸ் டெரிக் ஓ பிரையன் உள்பட பலரும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் தெரிவித்தனர். இதேபோல் திரிணாமுல் தொண்டர்கள் மீது பாஜகவினர் புகார் தெரிவித்தனர்.

மம்தாவுக்கு எதிராக கோஷம்
வன்முறைகள் நிகழாமல் தவிர்க்க அங்கு பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, நண்பகலில் போயல் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்குச் வாக்களிக்க சக்கர நாற்காலியில் சென்றார். அப்போது அங்கிருந்த சிலர் மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை இல்லை
இதனை தொடர்ந்து வாக்களித்து விட்டு அந்த வாக்குச்சாவடியின் முன்னாள் அமர்ந்த மம்தா பானர்ஜி, 'இந்த வாக்குச்சாவடி உள்பட தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை ஓட்டுப் போட பாஜகவினர், துணை ராணுவப் படையினர் அனுமதிக்கவில்லை. உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து பாஜக குண்டர்களை கொண்டு வந்து மக்களை மிரட்டுகின்றனர். அவர்களுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக உள்ளனர். பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது குறித்தும், அவர்களின் அராஜகம் குறித்தும் எங்கள் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.

கவர்னரிடம் புகார்
தொடர்ந்து அங்கு இருந்தபடி மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மம்தா பானர்ஜி, பாஜகவினர் துணை ராணுவப் படை மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் தடுப்பதாகவும், இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றும் தயவு செய்து இங்குள்ள நிலைமையை பாருங்கள் என்றும் மம்தா பானர்ஜி புகார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications