''பா.ஜ.க சொல் கேட்டு.. வாக்காளர்களை பாதுகாப்பு படையினர் துன்புறுத்துகின்றனர்''.. மம்தா புகார்!
கொல்கத்தா: பாதுகாப்பு படையினர் வாக்குச் சாவடிகளுக்குள் பொதுமக்களை நுழைய விடாமல் தடுத்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
பாஜகவின் உத்தரவின் பேரில் பெண்களைத் தாக்கி, மக்களைத் துன்புறுத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெறுப்பதாகவும் மம்தா பானர்ஜி கூறினார்.
மேற்கு வங்கத்தில் 3-ம் கட்ட தேர்தல்
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 3 கட்டமாக தேர்தல் முடிந்து விட்டது. இன்னும் 5 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று 31 தொகுதிகளுக்கு நடந்த 3-ம் கட்ட தேர்தலில் சில இடங்களில் பரபரப்பு நிலவியது. அரம்பாக் தொகுதி வேட்பாளர் சுஜாதா மொண்டலை மர்ம நபர்கள் சிலர் செங்கல் மற்றும் குச்சிகளால் தாக்கினார்கள்.
திரிணாமுல் காங்கிரஸ் பேரணி
ஒரு சில இடங்களில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னமான தாமரைக்கே வாக்குகள் பதிவாவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் பேரணியில் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெறுக்கிறேன்
பொதுமக்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பு படையினர்(சி.ஆர்.பி.எஃப்) வாக்குச் சாவடிகளுக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கக்கூடாது. உண்மையான ராணுவ வீரர்களாக இருக்கும் சிஆர்பிஎஃப் பணியாளர்களை நான் மதிக்கிறேன்,. ஆனால் பாஜகவின் உத்தரவின் பேரில் பெண்களைத் தாக்கி, மக்களைத் துன்புறுத்தும் சி.ஆர்.பி.எஃப் வீரர்களை வெறுக்கிறேன்.
ஒரு வாக்கு விலைமதிப்பற்றது
நேற்று பாஜகவினர் அரம்பாகில் பல அட்டூழியங்களை கட்டவிழ்த்து விட்டனர். அவர்கள் சுஜாதா மொண்டலை மூங்கில் குச்சிகளால் அடித்தார்கள். கடமையில் இருந்த ஒரு அதிகாரியை தலையில் தாக்கினார்கள். என் மக்களை துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை நான் அனுமதிக்க மாட்டடேன். நான் குண்டுகளை வீச மாட்டேன், ஒரு வாக்கு என்பது மிகவும் விலைமதிப்பற்றது என்று நான் கூறுகிறேன்.
பாஜக ஒன்றும் செய்யாது
குடியுரிமை திருத்தச்சட்டம் (சிஏஏ) எங்கே? அவர்கள்(பாஜக) சிஏஏ, என்ஆர்சி பற்றி அதிகம் பேசினார்கள். அவர்கள் நிறைய பேசுவார்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். அசாமில் 14 லட்சம் பெங்காலி மொழி பேசும் மக்கள் வெளியே விடப்பட்டுள்ளனர் என்று மம்தா பானர்ஜி பேசினார்.