'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா
கொல்கத்தா: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அவர் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
மேற்கு வங்கத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
அடுத்தாக வரும் ஏப்ரல் 17ஆம் தேதி ஐந்தாம் கட்டமாக 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

சர்ச்சை பேச்சு
மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா பானர்ஜி, கடந்த சில தினங்களுக்கு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகப் புகார் எழுந்தது. அதாவது பாஜகவிடம் பணம் பெற்றுகோண்டு பேசும் சைத்தானின் பேச்சைக் கேட்டு சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க வேண்டாம் என்று மம்தா பேசியிருந்தார். இது குறித்து பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது.

ஒரு நாள் தடை
மம்தாவின் பேச்சு சமூகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாலும் இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதாலும் மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்தது. ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 8 மணி முதல் நேற்றிரவு 8 மணி வரை மம்தா பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் ஆணையம் ஜனநாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதாக மம்தா குற்றஞ்சாட்டினார்.

தர்ணா போராட்டம்
மேலும், நேற்று மதியம் கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்திலும் அவர் ஈடுபட்டார். தனி ஆளாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். வழக்கமாக மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் மம்தா, அமைதியாக ஓவியம் வரைந்தார். மதியம் 12 மணிக்கு தொடங்கிய மம்தாவின் தர்ணா போராட்டம் இரவு முடிவுக்கு வந்தது.

மீண்டும் மம்தா
மம்தாவுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்றுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்குகிறார். 5ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மம்தா இன்றையப் பிரசாரம் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. மம்தா மீண்டும் பிரசாரத்தை தொடங்குவதால், திரிணாமுல் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

பாஜக நிர்வாகி
முன்னதாக, நேற்று கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 2 நாட்கள் தடை விதித்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. கூச் பிகாரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 பேருக்குப் பதிலாக 8 பேரையாவது சுட்டுக் கொன்றிருக்க வேண்டும் என ராகுல் சின்ஹா பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications