நுபுர் சர்மா முதல் ஹவுரா கலவரம் வரை.. பாஜக செய்த பாவங்களால் மக்கள் அவதி! கொந்தளித்த மம்தா பானர்ஜி..!
கொல்கத்தா : கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது எனவும், பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க மாநில முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக இந்தியாவுக்கு உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றுத் தந்திருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் கூட இந்தியாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.
அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தனைக்கும் காரணம் பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் சர்ச்சைப் பேச்சு.

நுபுர் சர்மா சர்ச்சை
நபிகள் நாயகத்தை அவர் அவதூறாகப் பேசியதன் விளைவாகவே இத்தனை களேபரங்கள் தொடர்கின்றன. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக பேசுகையில் நபிகள் நாயகத்தை தரக்குறைவாக விமர்சித்து கட்சி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். ஆனாலும் விவகாரம் இவ்வளவு தீவிரமாகும் என அவரே நினைத்திருக்க மாட்டார். பல உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய தூதர்களை நேரில் அழைத்து கண்டனத்தை பதிவு செய்தன.

இஸ்லாமியர்கள் போராட்டம்
இந்த நிலையில், நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மேற்கு வங்கத்தின் ஹவுரா பகுதியில் வன்முறை வெடித்தது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் நேற்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இதில் 2 பேர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
Recommended Video

பல இடங்களில் வன்முறை
இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்தவம், போராட்டக்காரர்களைக் கலைக்கவும் போலீஸார் முயன்றனர். போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் நுபுர் சர்மா விவகாரம் முதல் கலவரம் வரை பாஜகதான் காரணம் என மேற்கு வங்க மாநில முதல்வரும் , திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி கண்டனம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி,"நான் இதற்கு முன்னரும் இதனைக் கூறி இருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக வன்முறை காரணமாக ஹவுராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குப் பின்னால் சில அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்கள் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள். இதனை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக செய்யும் பாவங்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications