பாஜகவின் அந்த செயல் நம் நாட்டிற்கு பெரிய களங்கம்.. அவர்களை எதிர்த்தாலே தேச விரோதிகளா.? மம்தா ஆவேசம்
கொல்கத்தா: பாஜகவுக்கு எதிராகக் கேள்விக்குக் கேட்கும் அனைவரும் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டப்பிரிவு 370 அவசர கதியில் நீக்கப்பட்டதால் நாட்டிற்கு சர்வதேச அளவில் களங்கம் ஏற்பட்டதாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 2 ஆண்டுகளாக அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எல்லாம் துணைநிலை ஆளுநரே கவனித்து வந்தார்.

அனைத்து கட்சி கூட்டம்
இந்நிலையில். சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இதில் காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் என்ன மாதிரியான விஷயங்கள் விவாதிக்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சர்வதேச அளவில்
காஷ்மீர் தலைவர்களுடன் பிரமர் மோடி நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், "முதலில் அவர்கள் ஏன் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை நீக்கினார்கள் என்றே எனக்கு புரியவில்லை. அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த செயலால் சர்வதேச அளவில் நாட்டின் பெயர் களங்கப்பட்டது" என்றார்.

தேச விரோதிகள்
மேலும், பாஜகவுக்கு எதிராகக் கேள்வி கேட்கும் அனைவரும் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்த விவசாய சட்டங்களை மிகக் கடுமையாக விமர்சித்த அவர், இந்த மூன்று சட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் சரியானது என்றும் அவர் கூறினார்.

மம்தா vs பாஜக
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பாஜகவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் போக்கு தான் நிலவி வந்தது. அதிலும் குறிப்பாகத் தேர்தல் பிரசாரத்தின்போது இரு தரப்பிற்கும் ஏழாம் பொருத்தம் தான். மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி தொடங்கிய அமித்ஷா, ராஜ்நாத் சிங் என பல முக்கிய தலைவர்கள் அங்குத் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். இருப்பினும், பாஜகவால் அங்கு மூன்று இலக்கில்கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications