மமதா- பாஜக இடையேயான உறவு.. எதுவுமே தெரியாத மக்கு காங்கிரஸ்.. நறுக் நறுக்கென குட்டும் சிபிஎம்!
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி விரைவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துவிடுவார்; இதை புரிந்து கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது என அம்மாநில சிபிஎம் தலைவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பாஜகவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட "இந்தியா" கூட்டணியில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 2 இடங்களைத்தான் தர முடியும் என பிடிவாதம் காட்டினார் மமதா. காங்கிரஸ் கட்சியோ 8 முதல் 10 இடங்களைக் கேட்டுப் பார்த்தது. மமதா விட்டுக் கொடுப்பதாக இல்லை.

இதனையடுத்து மமதா பானர்ஜி எங்களுக்கு பிச்சையா போடுகிறார்? எங்க கூட்டணியால்தான் 2011-ல் ஆட்சியையே பிடித்தவர் மமதா.. அவருடைய கருணையால் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய தேவையே இல்லை என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி காட்டமாக பதிலடி கொடுத்தார். இதற்கு மமதா பானர்ஜியோ, காங்கிரஸுடன் தேர்தல் கூட்டணியே கிடையாது; ஆனாலும் இந்தியா கூட்டணியில்தான் இருப்போம்; 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும் என அறிவித்தார். இது "இந்தியா" கூட்டணியின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிவிட்டது. மமதா பானர்ஜியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டி என அறிவித்து காங்கிரஸை கழற்றிவிட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் வேறுவழியே இல்லாமல் இடதுசாரிகளுடன் இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க மாநில சிபிஎம் மாநில செயலாளர் முகமது சலீம் கூறியதாவது: மமதா பானர்ஜி குறித்து நிதிஷ்குமார் ஏற்கனவே பட்டவர்த்தனமாக பேசியிருக்கிறார். மமதா பானர்ஜி தம்முடைய நிலைப்பாட்டை தொடர்ந்து மாற்றிக் கொள்பவர் என்பது நிதிஷ் குமாரின் குற்றச்சாட்டு. காங்கிரஸை உடைத்து தூளாக்க வேண்டும் என்ற பாஜக- ஆர்.எஸ்.எஸ். ஆலோசனையின் பேரில்தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையே மமதா பானர்ஜி தொடங்கினார். ஆகையால் மமதா பானர்ஜி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இணைவார். "இந்தியா" கூட்டணி என்பது தேர்தலுக்கான ஒரு கூட்டணி மட்டுமல்ல. பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய கூட்டணி. இவ்வாறு முகமது சலீம் கூறினார்.












Click it and Unblock the Notifications