ஜெ., மாயாவதியுடன் இணைந்து செயல்படுவதில் தயக்கம் இல்லையே: சொல்வது மமதா
கொல்கத்தா: தமிழக முதல்வர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோருடன் இணைந்து செயல்படுவதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மமதா பானர்ஜி கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரை முதலில் ஒருங்கிணையுங்கள்.. அவர்களுடன் இணைந்து செயல்படுவதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை. எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.
என்னை பெண்ணியவாதி என்று கூறுவதைவிட மனிதாபிமானவர் என்று சொல்வதையே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த நாட்டின் ஹிந்துக்களுக்கோ இஸ்லாமியர்களுக்கு அல்லது பெண்களுக்கோ தலைவர் என்று சொல்லிக் கொண்டது கிடையாது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டுவரப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் அடித்தட்டு நிலை வரை இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கிறோம். ஆனால் அந்த மசோதா நிறைவேறாமல் போவதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்.
எனக்கு அன்னா ஹசாரே மிது மிகுந்த மரியாதை உண்டு. அவர் மிகச்சிறந்த அறிவார்ந்த மனிதர்.
இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.