எங்க சோத்தை தின்னுட்டு.. எங்கிட்டேயாவா? ஒழிச்சுடுவேன்... பாஜகவினரை நேரில் எச்சரித்த மமதா!
கொல்கத்தா: தமது வாகனத்தை சூழ்ந்து கொண்டு ஆத்திரமூட்டும் வகையில் ஜெய் ஶ்ரீராம் கோஷங்களை எழுப்பிய வெளிமாநில பாஜகவினரை காரில் இறங்கி 'ஒழித்து கட்டிவிடுவேன்' என பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியை ஆத்திரமூட்டும் செயல்களை தொடர்ந்து பாஜகவினர் செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து குடியேறியவர்களை வைத்து இந்த முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன என்பது மமதா பானர்ஜியின் புகார்.

இப்படி செய்வதன் மூலம் வங்காளிகளுக்கும் வெளிமாநிலத்தவருக்கும் இடையே மோதலை உருவாக்க பாஜக சதி செய்கிறது என்பதும் அவரின் குற்றச்சாட்டு. இந்நிலையில் பாரக்பூர் பகுதியில் 2 இடங்களில் மமதா பானர்ஜியின் காரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஶ்ரீராம் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதனால் ஆத்திரமடைந்த மமதா பானர்ஜி காரில் இறங்கி அங்கே இருந்த கூட்டத்தினரிடம் ஆவேசமாக கூறியதாவது:
நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.. மேற்கு வங்கத்தை இன்னொரு குஜராத் ஆக மாற்ற முயற்சிக்காதீங்க.. வங்காளிகளுக்கும் பிற மாநிலத்தவருக்கும் இடையே மோதல் உருவாவதை நான் அனுமதிக்க முடியாது.
வெளிமாநிலத்தவர், மேற்கு வங்கத்தை தாய்வீடாக கருதுகிறார்கள். அவர்களை மதிக்கிறேன். உங்களது சுயமரியாதையை பாஜகவிடம் அடகு வைக்க வேண்டாம். பாஜக போன்ற கிரிமினல்களை எதிர்த்து இணைந்து போராட வேண்டும். இவ்வாறு மமதா கூறினார்.
இதனைத் தொடர்ந்து காரில் மமதா பானர்ஜி ஏறி அமர்ந்தவுடன் மீண்டும் ஜெய் ஶ்ரீராம் கோஷங்களும் மோடி! மோடி! என்கிற முழக்கங்களும் எழுப்பப்பட்டன. இதனால் காரைவிட்டு இறங்கிய மமதா, இந்த மாதிரி ரவுடித்தனத்தை பொறுத்துகிட்டு இருக்க முடியாது.
உங்களுக்கு சோறு போடுறோம்.. துணிமணி கொடுக்கிறோம். இதை எல்லாம் அனுமதிக்க முடியாது. நீங்க உயிர் வாழ்வதே எங்களால்தான்... என கொந்தளித்தார்.
இதேபோல் மற்றொரு இடத்தில் மமதா காரை சூழ்ந்து கொண்டு முழக்கங்கள் எழுப்ப ஆத்திரத்தின் உச்சத்துக்கு போன மமதா, காரைவிட்டு இறங்கி.. இப்ப இங்க வந்து என் முன்னாடி கோஷம் போடுங்க.. தைரியம் இருந்தா இப்ப வந்து கோஷம் போடுங்க.. கிரிமினல்கள்.. ரவுடிகள்.. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.. என கடுமையாக வார்னிங் செய்தார் மமதா. மேலும் முழக்கமிட்டவர்கள் யார் என்பதை கண்டு நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு மமதா பானர்ஜி உத்தரவிட்டார்.
மமதா பானர்ஜியை ஆத்திரமூட்டுவதற்காகவே இத்தகைய முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும் திரிணாமுல் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மமதா செல்லும் இடங்களில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications