உள்துறை அமைச்சகத்தின் சம்மனை சட்டை செய்யாத மம்தா... மத்திய அரசுடன் ஆக்ரோஷ மோதல்..!
கொல்கத்தா: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிகழ்வு குறித்து அறிக்கை கோரிய உள்துறை அமைச்சகத்தின் சம்மனை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டை செய்யவில்லை.
மேலும், மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுக்க உள்துறை அமைச்சகத்துக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என மம்தா கடுகடுத்துள்ளார்.
மாநிலங்கள் தொடர்புடைய விவகாரங்களில் மத்திய அரசு தலையிட முயற்சிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையில் ஜே.பி. நட்டா இரண்டு நாட்களாக ஈடுபட்டிருந்தார். அப்போது வியாழக்கிழமை அன்று அவரது காண்வாட் வாகனங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தேசியளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவையே ஆளும் ஒரு கட்சியின் தேசியத் தலைவர் வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அவ்வளவு எளிதாக மத்திய அரசு விட விரும்பவில்லை.
இந்த சம்பவம் குறித்து அறிக்கை கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதுடன் மேற்கு வங்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை டிசம்பர் 14-ம் தேதி டெல்லி வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே இதற்கு விளக்கம் அளித்துள்ள மேற்கு வங்க மாநில அரசு, ஜே.பி. நட்டா செல்லும் பாதையில் 4 எஸ்.பி.க்கள், 8 டி.எஸ்.பி.க்கள், 14 காவல் ஆய்வாளர்கள், 70 காவல் உதவி ஆய்வாளர்கள், 40 ரிசர்வ்ட் ஆர்ம்ட் போர்ஸ் வீரர்கள், 259 கான்ஸ்டபிள்கள் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுக்கு பயம் கிடையாது... மம்தாவை எச்சரிக்கும் பாஜக... அமித்ஷா விரைவில் மேற்கு வங்கம் விஜயம்!
மேலும், பாஜக மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷின் உரைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில் இருப்பதாகவும் இதற்கு நட்டாவின் ஆதரவு வேறு உள்ளதாகவும் மம்தா விமர்சித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து பாஜகவினரால் அரங்கேற்றப்பட்ட நாடகம் இது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், தனது அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரையும், டிஜிபியையும் டெல்லிக்கு அனுப்பப் போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.