கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டறியலாமா?.. அப்ப மோடிஜி என் உடையை வைத்து நான்யாருனு சொல்லுங்க.. மம்தா
Recommended Video
கொல்கத்தா: தவறு செய்பவர்களை அவர்களது உடைகளை வைத்து வேறுப்படுத்தி பார்க்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல், பேரணி என நாடே கொந்தளித்து வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் பேரணியை தொடங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றார். அந்த வகையில் நேற்றும் அவர் பேரணியை தொடர்ந்தார்.

உடையை கண்டு அடையாளம்
அப்போது அவர் பேசுகையில், தலையில் அணிந்திருக்கும் தொப்பியை வைத்து பாஜகவினர் மக்களை வேறுப்படுத்தி பார்க்கின்றனர். ஆனால் போராட்டம் நடத்துபவர்களை மட்டும் அவர்கள் அணிந்திருக்கும் உடையை கொண்டே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.

மோடியால் சொல்ல முடியுமா
இந்த நாடு மோசமான கட்டத்தை நோக்கி செல்கிறது. நான் அணிந்திருக்கும் உடையை வைத்து நான் யார் என்பதை பிரதமர் மோடியால் சொல்ல முடியுமா? என்ன நடக்கிறது இந்த நாட்டில்?

சொந்த நலன்
பாஜகவினர் தங்கள் சொந்த நலனுக்காக எல்லாவற்றையும் செய்கின்றனர். அவர்கள் பிரிவினை மற்றும் அருவருக்கத்தக்க அரசியலில் ஈடுபடுகின்றனர். அஸ்ஸாமில் நடந்து கொண்டிருப்பதை பாருங்கள். திரிபுராவில் நடந்து கொண்டிருப்பதை பாருங்கள்.

இந்தியர்கள்
வருங்காலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களிலும் கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பும். அவர்களை பொருத்தமட்டில் நாம் இந்தியர்கள் அல்ல. அவர்களை பொருத்தமட்டில் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் இந்தியர்கள் அல்ல. பாஜக தலைவர்கள், பாஜக தொண்டர்கள், பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே இந்தியர்கள்.

சட்டம்
மேற்கு வங்கத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடிமக்கள் பதிவுக்காக தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் இறப்பிற்கு யார் பொறுப்பேற்பது? மக்கள் அனைவரும் போராட வேண்டும். ஆனால் சட்டத்தை ஒரு போதும் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார். ஜார்க்கண்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டறியலாம் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications