பிரதமர் மோடி மேடையை கவிழ்க சதி? சத்தமின்றி போல்டை கழற்றிய மர்ம ஆசாமி.. பாய்ந்தது போலீஸ் நடவடிக்கை
காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடையைக் கவிழ்க சதி செய்ததாகக் கூறி ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
குஜராத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி இருந்த நிலையில், இப்போது ஆம் ஆத்மியும் அங்குக் களத்தில் குதித்து உள்ளது. இதனால் மும்முனை போட்டி அங்கு ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி அங்குத் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அப்படித்தான் கடந்த அக். 31ஆம் தேதி பிரதமர் மோடி, குஜராத் தாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அங்குத் திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.

மர்ம ஆசாமி
அப்போது பிரதமர் மோடி மேடையில் இருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மேடை கவிழ்க்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். அதாவது மேடையைத் தாங்கி பிடிக்கும் போல்டுகளை அவர் கழற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். ஏதோ போனில் பேசுவது போல பாசாங்கு செய்து கொண்டே அவர் போல்டை கழற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியது.

பிரதமர் பேசும்போது
அந்த வீடியோவில் பிரதமர் மோடி பேசிக் கொண்டு இருப்பதும் கேட்கிறது. அதாவது பிரதமர் மோடி பேசும் போது, மேடை கவிழ்க்க அந்த நபர் இந்த முயற்சியில் இறங்கியதாகவும் சிலர் குற்றஞ்சாட்டினார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், போலீசார் இப்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து நேற்றைய தினம் போல்டை கழற்றிய நபரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் தாரத் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

கைது
அந்த நபரிடம் போல்டை கழற்றியது ஏன் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் சும்மா இதைச் செய்தாரா அல்லது திட்டமிட்டு மேடையைக் கவிழ்க்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் 8000 கோடி ரூபாய் மதிப்பிலான பல நீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்தின் மூலம் சுமார் 1000 கிராமங்கள் பயனடையும் எனக் கூறப்பட்டு உள்ளது.

குஜராத் தேர்தல்
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி குஜராத் சென்று இருந்தார். குஜராத்தில் உள்ள கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையிலிருந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மேலும், அன்றைய தினம் தான் அவர் மோர்பியில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சென்று நலம் விசாரித்தார். பால விபத்தைத் தொடர்ந்து இந்த வீடியோ வெளியானதாலேயே போலீசார் இதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications