குடியரசுத் தலைவர் மாளிகை வெடித்துச் சிதறும்: மிரட்டல் போன் அழைப்பால் பரபரப்பு
டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த போன் மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. போனை எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசியவர் குடியரசுத் தலைவர் மாளிகையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. சோதனையில் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதற்கிடையே மிரட்டல் போன் செய்த நபர் டெல்லியில் இருந்து பேசியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை தேடும் பணி நடந்து வருகிறது.
முன்னதாக மாலை 6 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த வேறு ஒருவர் டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியின் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். போலீசார் செல்போன் எண்ணை அளிக்க மறுத்ததும் மத்திய டெல்லியில் சில இடங்களில் குண்டு வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த அழைப்பை அடுத்து மத்திய டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அடுத்தடுத்து வந்த இரண்டு மிரட்டல் அழைப்புகளால் போலீசார் படாதபாடு பட்டுவிட்டனர்.
6 மணிக்கு போன் செய்தவர் டெல்லியில் உள்ள சகர்பூரில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டு போலீசார் அவரிடம் போன் மூலம் விசாரித்தனர். மனைவியுடன் சண்டை போட்ட கோபத்தில் அவ்வாறு போன் செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை விசாரணைக்கு அழைத்து வர போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர்.












Click it and Unblock the Notifications