காதலிக்க மறுப்பு... இளம்பெண்ணின் கை விரல்களைத் துண்டித்த இளைஞர்
பெங்களூரு: காதலிக்க மறுத்த பெண்ணின் கை விரல்களை துண்டித்த இளைஞரை மாண்டியா போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் பெஸகரஹள்ளியை சேர்ந்தவர் ரவி (25). இவர் கடந்த ஓராண்டாக, அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரைக் காதலித்துவந்துள்ளார். ஆனால், அப்பெண் ரவியின் காதலை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் தனிமையில் சந்தித்துப் பேச அப்பெண்ணை ரவி அழைத்துள்ளார். ஆனால், ரவி அழைத்த இடத்திற்கு அப்பெண் செல்லவில்லை. இதனால் அப்பெண் மீது ரவி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ரவி நேற்று முன்தினம் அப்பெண்ணின் வீட்டிற்கு எதிரே காத்திருந்துள்ளார். அப்போது அப்பெண் கடைக்கு செல்வதற்காக வெளியில் வந்துள்ளார். வழியில் அவரை இடைமறித்த ரவி, அப்பெண்ணின் வலது கை விரல்களைக் கத்தியால் வெட்டித் துண்டித்துள்ளார்.
வலியால் அலறித் துடித்த அப்பெண்ணை சிகிச்சைக்காக மாண்டியா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரவியைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணின் கை விரல்களை இளைஞர் துண்டித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications