காளஹஸ்தியில் கொடூரம்: ரூ. 6,000 பணத்திற்காக கொலை.. சென்னை பெண் உள்பட 3 பேர் கைது
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியி், தனியார் விடுதியில் ரூபாய் 6 ஆயிரம் பணத்துக்காக வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஹைதராபாத்தை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது நண்பர் மகேஷ். இருவரும் கடந்த மாதம் காளஹஸ்தியில் வங்கி கட்டிட பணிக்கு வந்தனர். அவர்கள் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், அறையில் தனியாக இருந்த சீனிவாஸ் கை நரம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.
சீனிவாசை கொலை செய்த சென்னை போரூரை சேர்ந்த விஜயன், சாந்தி, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். விஜயன், சாந்தி ஆகியோரை பிடித்து போலீசார் ஸ்ரீகாளஹஸ்திக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், "நாங்கள் 3 பேரும் சில ஊருக்கு செல்வோம். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது, இரவில் சாந்தியை தனியாக நிற்க வைத்து லாரியில் செல்லும் டிரைவர்களிடம் லிப்ட் கேட்பது போல் நடித்து டிரைவர்களை ஆசைக்கு இணங்க வரவழைப்பதுபோல் போக்குக் காட்டி காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று டிரைவர்களை அடித்து உதைத்து அவர்களிடம் உள்ள பணத்தை பறித்து செல்வோம்.
லாரியில் ஏற்றி வரும் விலை உயர்ந்த பொருட்களாக இருந்தால் டிரைவரை கொலை செய்து பொருட்களுடன் லாரியை கடத்தி சென்று விற்று விடுவோம். இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம். அதேபோல் ஸ்ரீகாளஹஸ்தியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.
அதற்காக நாங்கள் 3 பேரும் டிசம்பர் 21 ஆம் தேதி ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்தோம். முதலில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்தோம். பின்னர் அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். நாங்கள் தங்கியிருந்த பக்கத்து அறையில் சீனிவாசும், மகேசும் தங்கியிருந்தனர்.
நாங்கள் வெளியே வரும்போதெல்லாம் அறையில் சீனிவாஸ் மட்டும் தனியாக இருப்பார். அவரிடம் டெலிவிஷன் ரிமோர்ட் வாங்குவது போல் பேச்சு கொடுத்தோம். அவர் டெலிவிஷன் ரிமோர்ட்டை கொடுத்து உதவினார். அவர் எங்களிடம் நன்றாக பழகினார். 22 ஆம் தேதி பழக்கம் மிகவும் நெருக்கமானது. கடந்த 23 ஆம் தேதி மாலை அறையில் சீனிவாஸ் மட்டும் தனியாக இருந்தார்.
நாங்கள் 3 பேரும் சேர்ந்து அவரிடம் பணம் கேட்டோம். அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி விட்டார். தன்னிடம் இருந்த பணத்தை கொடுக்கவும் அவர் மறுத்து வந்தார். அப்போது எங்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த நாங்கள் 3 பேரும் சேர்ந்து சீனிவாசை கீழே தள்ளி வாயைப் பொத்தினோம். கை, கால்களை கயிறால் கட்டிப்போட்டோம். நாங்கள் கையில் வைத்திருந்த கத்தியால் சீனிவாசின் மணிக்கட்டு நரம்புகளை அறுத்தோம். அவரிடம் இருந்த செல்போன், ரூபாய் 6 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டோம்.
மணிக்கட்டு நரம்புகளை அறுத்ததால், அதன் வழியாக ரத்தம் அளவுக்கு அதிகமாக வெளியேறி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து விட்டதாக வெளியான செய்தியை மறுநாள் காலை பார்த்து தலைமறைவாகி விட்டோம். விஜயன் வைத்திருந்த ஆதார் அட்டை கீழே தவறியதால் அதனை வைத்து போலீசார் எங்களை பிடித்து விட்டனர்" என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications