பெங்களூரில் மனைவி, மாமியாரை கொடூரமாக குத்திக் கொன்ற ஹோட்டல் அதிபர்
பெங்களூர்: பெங்களூரில் 36 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு அவரையும், அவரது தாயையும் குத்திக் கொலை செய்துள்ளார்.
பெங்களூரில் கொலிமனே என்ற பெயரில் உணவகங்களை நடத்தி வருபவர் குமார்(36). பெங்களூர் விஜயநகரில் உள்ள ஆர்.பி.சி. லேஅவுட்டில் தரைதளத்தில் கடையும், முதல் தளத்தில் குமாரின் வீடும் உள்ளது. குமாருக்கு அவர் மனைவி வசந்தா(34) கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன அவர்களுக்கு இன்சாரா(10) என்ற மகளும், தேஜாஸ் கவுடா(5) என்ற மகனும் உள்ளனர். கொலிமனேவின் சந்திரா லேஅவுட் கிளையை வசந்தா நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை வசந்தா தனது வீட்டுக்கு அருகே உள்ள தனது தாய் லீலம்மா(61) வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற குமார் வசந்தாவை அவரது தாய் வீட்டில் வைத்து கத்தியால் குத்தினார். இதை பார்த்த லீலம்மா மகளை காப்பாற்ற ஓடி வந்தார். குமார் லீலம்மாவையும் கத்தியால் குத்தினார். அவர் அவர்கள் இருவரையும் பலமுறை கத்தியால் குத்தியதுடன் கழுத்தையும் அறுத்தார்.
இதையடுத்து குமார் தனது பைக்கில் ஏறிச் சென்று விஜயநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். லீலம்மாவின் வீட்டிற்கு சென்ற வசந்தாவின் சகோதரி லக்ஷ்மி தனது தாயும், சகோதரியும் பிணமாகக் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications