ரெய்டு பயம்.. 14000 கோடி கருப்பு பணத்தை தானாக முன்வந்து காட்டிய குஜராத் தொழிலதிபர் தலைமறைவு
அகமதாபாத்: மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கருப்பு பணத்தை வெளியிட்ட குஜராத் மாநில தொழில் அதிபர் திடீரென தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கணக்கில் காட்டாத கருப்புப் பணத்தை வெளியிட மத்திய அரசு சிறப்புத் திட்டத்தை அறிவித்தது.
இந்தத் திட்டத்தின்படி தம்மிடம் இருந்த 13 ஆயிரத்து 860 கோடி ரூபாயை மகேஷ் ஜா என்ற ரியல் எஸ்டேட் அதிபர் வெளியிட்டார்.
இந்நிலையில், அவரது வருமான வரி பாக்கிக்காக வருமானவரித்துறையினர் அவரது வீடு அலுவலகங்களில் திடீரென சோதனை நடத்தினர். அவரது ஆடிட்டர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனால் அச்சம் அடைந்த மகேஷ் ஜா திடீரென தலைமறைவாகிவிட்டார்.
மகேஷ் ஜா அகமதாபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 4 படுக்கை வசதி கொண்ட வீட்டில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2-3 வருடங்களாக வருட வருமானமாக ரூ.2 முதல் 3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கு காட்டி வந்துள்ளார் மகேஷ் ஜா .
கடந்த மாதம் 29-ம் தேதி முதல் மகேஷ் ஜா தொடர்பில் இல்லை என்று அவரது பார்ட்னரான 90-வயதுடைய சேத்னா தெரிவித்துள்ளார். மும்பை, புனே, குஜராத் ஆகிய இடங்களில் நில விற்பனைத் தொழில் மகேஷ் ஜா ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அவர் வெளியிட்ட பணத்துக்கான வரித்தொகை ரூ.1560 கோடியை நவம்பர் 30-ம் தேதி மகேஷ் ஜா கட்டினார். ஆனால் அவரது உத்தரவாத பத்திரத்தை வருமானவரித்துறையினர் நவம்பர் 28-ம் தேதியே ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மகேஷ் ஜா தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து வருமானவரித்துறையினர் கூறியிருப்பதாவது: கருப்பு பணத்தை வெளியிட்டதற்கும் அவரது வீட்டில் நடத்திய சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ் ஜா வீடுகள் உள்ளிட்ட 67 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 40 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.