வெற்றிகரமாக 2 ஆம் ஆண்டில் காலடி வைத்தது “மங்கள்யான்” - இஸ்ரோ மகிழ்ச்சி
பெங்களூரு: செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு மங்கள்யான் விண்கலம் ஓராண்டை நிறைவு செய்தது. இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி மங்கள்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் விண்வெளி பாதையில் சுமார் 10 மாதங்கள் பயணம் செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது.
செவ்வாய் கிரகத்தை அந்த விண்கலம் புகைப்படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. காற்று மண்டலம், மீத்தேன் வாயு உள்ளிட்டவை குறித்து அந்த விண்கலம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய்கிரகத்தை அடைந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இன்று முதல் 2 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இதை கொண்டாடும் வகையில் மங்கள்யான் விண்கலம் இதுவரை எடுத்து பூமிக்கு அனுப்பிய புகைப்படங்களை தொகுத்து இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
முதலில் அந்த விண்கலம் 6 மாதங்கள் மட்டுமே செயல்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த விண்கலம் மேலும் 6 மாதங்கள் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. இப்போது அந்த விண்கலம் இன்னும் சில ஆண்டுகள் செயல்படும் திறன் உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.