சோனியா பிரதமர் பதவியை ஏற்காததற்கு ராகுல்தான் காரணம்: சொல்வது மணிசங்கர் அய்யர்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்காததற்கு அவரது மகன் ராகுல்தான் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.
தமது சுயசரிதை புத்தகத்தின் மூலம் காங்கிரஸ் கட்சி குறித்து ஏராளமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங். அதில் இந்திரா மற்றும் ராஜிவ் போல சோனியாவும் பிரதமர் பதவி ஏற்றால் படுகொலை செய்யப்படுவார் என்று ராகுல் காந்தி அச்சப்பட்டார். அதனால்தான் சோனியா பிரதமராக பதவி ஏற்கவில்லை என்றும் நட்வர்சிங் கூறியிருக்கிறார்.
தற்போது இந்த கருத்தை மூத்த காங்கிரஸ் தலைவரான மணிசங்கர் அய்யரும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த மணிசங்கர் அய்யர் கூறியுள்ளதாவது:

கட்சி நலன் கருதி..
ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் காங்கிரஸின் நலனில் சோனியா அக்கறை காட்டியதில் தவறு எதுவும் இல்லை. காங்கிரஸ் பாரம்பரியத்தைக் காப்பாற்றவும் கட்சியின் எதிர்கால நலன் கருதியும் அவர் அரசியலில் இறங்கினார்.

சர்வாதிகாரி அல்ல..
நட்வர்சிங் சொல்வதைப் போல சோனியா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல. அதே நேரத்தில் ராஜிவ் படுகொலையின் போது சங்கர் தயாள் சர்மாவைத்தான் சோனியா பிரதமராக்க நினைத்தார் என்பது உண்மைதான். அது காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ராகுலின் அச்சம்..
2004-ல் சோனியா பிரதமர் பதவி ஏற்பதை ராகுல் காந்தி விரும்பவில்லை. சோனியா பிரதமரானால் அவரும் படுகொலை செய்யப்படலாம் என்று ராகுல் அச்சப்பட்டார். அதே நேரத்தில் சோனியா பிரதமர் பதவியை ஏற்காமல் போனதற்கு வேறுச் சில காரணங்களும் இருந்தன. அதை நட்வர்சிங் அறிந்திருக்கவில்லை. நட்வர்சிங் தமது நினைவில் இருந்தவற்றை எழுதியிருக்கிறார். இதில் பாதிதான் உண்மை. முழுமையும் உண்மை அல்ல.

தவறு ஏதும் இல்லை.
தன்னுடைய தாயாரின் பாதுகாப்பு பற்றி ராகுல் காந்தி கவலைப்பட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?
இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications