மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா! ஆளுநரை சந்தித்து கடிதத்தை வழங்கினார்!
இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். இம்பாலில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார் பிரேன் சிங்.
மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி - குக்கி ஆகிய இரு பிரிவு மக்கள் இடையே கலவரம் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. கலவரத்தை ஒடுக்குவதில் அம்மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பிரேன் சிங் ராஜினாமா செய்யவேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு மாநில முதல்வரே காரணம் எனக் கூறி, சில ஆடியோக்கள் வெளியாகின. குக்கி சமூகத்தினர் மாணவர் அமைப்பு, இந்த ஆடியோ ஆதாரங்களை இரண்டு கட்டங்களாக கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது.
வன்முறையை தூண்டும் விதமாக முதல்வர் பிரேன் சிங் பேசியதாக ஆடியோ வெளியானது குறித்து, விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய தடயவியல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அண்மையில், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக கூறி அதற்காக மன்னிப்பும் கேட்டு இருந்தார் மாநில முதல்வர் பிரேன் சிங். நேற்று அம்மாநிலத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய பிரேன் சிங். மணிப்பூரில் கலவரத்தை ஒடுக்கி, அமைதியை நிலைநாட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் திடீரென தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்து வழங்கி உள்ளார்.
டெல்லியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் பிரேன் சிங். அதைத்தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார்.
புதிய முதலமைச்சர் பொறுப்பேற்கும் வரை முதல்வர் பதவியில் தொடருமாறு ஆளுநர் அவரைக் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ப்ரேன் சிங் 2023 ஜூலை மாதத்தில் தனது ராஜினாமாவை சமர்ப்பித்திருந்தார். எனினும், அவரது ஆதரவாளர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அவர் அதைத் திரும்பப் பெற்றார்.












Click it and Unblock the Notifications