நள்ளிரவில் சுற்றி வளைத்த கும்பல்.. முதல்வர் வீட்டில் தாக்குதல்? மணிப்பூரில் மீண்டும் பெரும் பதற்றம்
இம்மால்: மணிப்பூரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வரின் வீட்டை முற்றுகையிடச் சிலர் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை உச்சத்தில் இருந்தது.. இந்த காலகட்டத்தில் அங்கே பெண்களுக்கு எதிராக மிக மோசமான சம்பவங்களும் கூட நடைபெற்றன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி புயலைக் கிளப்பியது.

பெரும் போராட்டத்திற்குப் பிறகுச் சற்று அமைதி திரும்பிய நிலையில், இப்போது மீண்டும் வன்முறை ஆரம்பித்துள்ளது. அங்கே இரண்டு மைனர்கள் கொலை செய்யப்பட்ட படம் வெளியான நிலையில், மீண்டும் வன்முறை ஆரம்பித்துள்ளது.
முதல்வர் வீட்டில் தாக்குதல்: மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கி இருக்கிறது. மணிப்பூர் தலைநகர் இம்பாலின் புறநகரில் உள்ள மணிப்பூர் முதல்வர் என் பிரேன் சிங்கின் வீட்டை நேற்றிரவு கும்பல் தாக்க முயன்றுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு போடப்பட்டுள்ள போதிலும், இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்த கும்பலை போலீசார் விரட்டியடித்தனர்.
இந்தச் சம்பவம் நடந்தது மணிப்பூர் முதல்வர் தற்போது வசிக்கும் இல்லம் இல்லை. மாறாக அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பரம்பரை வீடாகும். அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை என்பதால் மோசமான பாதிப்பு தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மணிப்பூர் முதல்வர் தற்போது வசிக்கும் வீடு முற்றுகையிட்டுத் தாக்கப்பட்டதாக இணையத்தில் தவறான தகவல்கள் பரவின. அதை மணிப்பூர் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
முதல்வர் எங்கே: மணிப்பூர் முதல்வர் தனியாக மற்றொரு இடத்தில் தான் வசித்து வருகிறார். அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து போலீசார் கூறுகையில், "இம்பாலில் உள்ள ஹெய்ங்காங் பகுதியில் உள்ள முதல்வரின் குடும்ப சொத்தாக இருக்கும் வீட்டைத் தாக்கும் முயற்சி நடந்தது. இருப்பினும், அந்த வீட்டில் இருந்து 100-150 மீட்டர் தொலைவிலேயே அந்த கும்பலைப் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
வீட்டில் யாரும் இல்லை என்ற போதிலும் அங்கும் 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது. இரு வேறு திசைகளில் இருந்து ஒரே நேரத்தில் முதல்வரின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இருப்பினும், அதை வெற்றிகரமாக முறியடித்துவிட்டோம்" என்று அவர் தெரிவித்தார். போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட போதிலும் அந்த கும்பல் உடனடியாக அந்த இடத்தில் இருந்து வெளியேறவில்லை. முதலில் அந்த கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசினர்.
மின் இமைப்பு துண்டிப்பு: அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மேலும் முன்னேறி வராமல் இருக்க அப்பகுதி முழுக்க மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. மேலும், அதிக எண்ணிக்கையில் தடுப்புகளும் போடப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த கும்பல் அந்த இடத்தில் இருந்து வெளியேறியது. இருப்பினும், அருகே உள்ள சாலையில் அவர்கள் டயர்களை எரித்துள்ளனர். இதனால் சற்று நேரம் அங்கே பதற்றம் நிலவியது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களால் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது. இருப்பினும் இதில் யாருக்கும் எந்தவொரு காயங்களும் ஏற்படவில்லை. அங்கே இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து மீண்டும் வன்முறை உச்சமடைந்து வருகிறது. பல ஆயிரம் மாணவர்கள் இம்பால் நகரை நோக்கி பேரணியாகச் செல்ல தொடங்கினர். அவர்கள் மணிப்பூர் மாநிலத்திற்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.
கண்ணீர்ப் புகைக் குண்டு: மாணவர்கள் பேரணி நடத்திய போது கடந்த புதன்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களை நோக்கி கண்ணீர்ப் புகைக் குண்டுகளும், தடியடியும் நடத்தப்பட்டன. இதில் மாணவர்கள் பலரும் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications