ஆயுத படை சிறப்பு சட்டம் தேவை இல்லைதான்- தேச பாதுகாப்பு முக்கியமாச்சே... குழப்பும் மணிப்பூர் முதல்வர்
இம்பால்: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம் நாடு முழுவதுமே நீக்கப்பட வேண்டும்தான்.. ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குழப்பமான கருத்து தெரிவித்துள்ளார்.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
சாதித்த பாஜக
கடந்த சட்டசபை தேர்தலில் பாஜக வெறும் 21 இடங்களைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சி 28 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. ஆனால் பாஜகவோ மாநில கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தது. பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கொத்து கொத்தாக வளைத்துப் போட்டது.
நாகாலாந்து படுகொலை
தற்போது நடைபெற உள்ள தேர்தலில் பாஜகவே ஆட்சியை கைப்பற்றும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த தேர்தலில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை நீக்க வேண்டும் என்பது பிரதான விவகாரமாக இருந்து வருகிறது. நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி தொழிலாளர்களை ராணுவம் சுட்டுப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆயுத படையினருக்கான சட்டம்
இதனால் நாகாலாந்து மாநிலத்தில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அம்மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. ஆனாலும் மத்திய அரசு நாகாலாந்தில் அந்த சட்டத்தை அமல்படுத்தியது. இதேபோல் மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஆயுத படை சட்டத்துக்கு எதிராக குரல் எழுந்தது. இது தொடர்பாக மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குழப்பமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
குழப்பமான பதில்
அதாவது ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரம் தரும் சட்டம் தேவை இல்லை; ஆனால் நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ள வேண்டியதும் இருக்கிறது. அண்டை மாநிலமான மியான்மரில் ராணுவ கொடுங்கோலாட்சி நடைபெற்று வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் மிசோரம், மணிப்பூரில் அடைக்கலம் கோரி வருகின்றனர். இதனை எல்லாம் கருத்தில் கொண்டே ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.