மணிப்பூரில் திடீர் திருப்பம்:பாஜகவுக்கு வாக்களிக்காவிட்டால்...குக்கி மக்களுக்கு கூட்டமைப்பு வார்னிங்
இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக 17 பயங்கரவாத இயக்கங்கள் இணைந்த குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் மாநில சட்டசபைக்கு நாளையும் மார்ச் 5-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மணிப்பூரில் பாஜகவுக்கு எதிராக இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்டவை ஓரணியில் இணைந்துள்ளன. மாநில கட்சிகளும் பாஜகவை விட்டு விலகி நிற்கின்றன. 2017-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் அத்தனை காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்ட கெத்தில் களமிறங்கி இருக்கிறது பாஜக.

இடதுபோராளிகள் எதிர்ப்பு
மணிப்பூர் தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்த போது இடதுசாரி போராளி குழுக்களின் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மணிப்பூர் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கும் இடதுசாரி போராளி குழுக்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த நிலையில் மற்றொரு போராளிக் குழுக்களின் கூட்டமைப்பு பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

குக்கி இன மக்கள்
மணிப்பூரை பூர்வீகமாக கொண்ட குக்கி தேசிய இன மக்கள் தீர்மானிக்கும் சக்திகளாகவும் இருக்கின்றன. குக்கி தேசிய இன மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுதம் ஏந்தி போராடுகிற குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இப்படியான 17 குக்கி தேசிய இன மக்களின் குழுக்களின் இணைந்த கூட்டமைப்புதான் குக்கி தேசிய கூட்டமைப்பு. இந்த அமைப்புதான் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பாஜக ஆதரவு
இது தொடர்பாக குக்கி தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மத்திய அரசுடன் குக்கி தேசிய மக்கள் கூட்டமைப்பு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குக்கி தேசிய இன மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதாக மத்திய அரசும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உறுதி அளித்துள்ளனர். சூரத்சந்த்பூரில் கடந்த 23-ந் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா இதனை பகிரங்கமாகவும் அறிவித்தார்.

கூட்டமைப்பு எச்சரிக்கை
ஆகையால் மணிப்பூர் மாநில 12-வது சட்டசபை தேர்தலில் குக்கி தேசிய கூட்டமைப்பு பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. அனைத்து குக்கி தேசிய கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும் குக்கி இன மக்கள், பாஜகவுக்கு வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டுகிறோம். இதற்கு எதிராக குக்கி இன மக்கள் வாக்களித்தால் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு குக்கி தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications