மணிப்பூர்: 2-ம் நாளாக ராகுல் விசிட்!அமைதி திரும்ப நடவடிக்கை தேவை- ஆளுநரை சந்தித்த பின் வலியுறுத்தல்!
இம்பால்: மணிப்பூரில் முகாமிட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று 2-வது நாளாக வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் நீடிக்கின்றன. மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் அமைதியை திரும்ப செய்ய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலன் தரவில்லை. இம்மாநிலத்தில் 50,000க்கும் அதிகமான ராணுவத்தினர் குவிக்கப்பட்ட நிலையில் வன்முறைகள் தொடருகின்றன. மணிப்பூர் மாநிலத்துக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மக்களை சந்திக்கவில்லை என்பதும் விமர்சனமாக முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் த்அலைவர் ராகுல் காந்தி 2 நாட்கள் பயணமாக மணிப்பூர் மாநிலத்துக்கு நேற்று சென்றடைந்தார். பாதிக்கப்பட்ட மக்களை அகதிகள் முகாமில் சந்திக்க, சாலை மார்க்கமாக ராகுல் காந்தி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ராகுல் காந்தி வாகனத்தை போலீசார் மறுத்து சாலை மார்க்கமாக செல்ல தடை விதித்தனர். இதனால் பெரும் பரபரப்பும் பதற்றமும் நீடித்தது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாகவும் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல் காந்தி சந்தித்து கலந்துரையாடினார். இதன்பின்னர் இம்பால் ஹோட்டல் ஒன்றில் 10 அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
மணிப்பூரில் ராகுல் காந்தி பயணம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே பாஜக அலுவலகங்கள் தாக்கப்பட்டன. இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்

இதனிடையே ராகுல் காந்தியின் மணிப்பூர் பயணத்தை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ராகுல் காந்தியால் மணிப்பூரில் அமைதியை கொண்டுவர முடியுமா? அரசியல் லாபத்துக்காக மட்டுமே ராகுல் காந்தி மணிப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது நிலைமையை மேலும் மோசமாக்கக் கூடும் எனவும் பாஜக தலைவர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.
மேலும் இம்பாலில் மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை ராகுல் காந்தி சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும். அமைதிதான் இங்கே தேவையான ஒன்றாக இருக்கிறது. மணிப்பூர் அகதிகள் முகாம்களை பார்வையிட்டேன். மக்களை சந்தித்தேன். அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications