எரிகிற மணிப்பூரில் விமான நிறுவனங்களின் குரூர லாபம்! இம்பால்- கொல்கத்தா ஃபிளைட் டிக்கெட் ரூ30,000
இம்பால்: மணிப்பூர் இன வன்முறைகளால் அம்மாநிலத்தில் இருந்து தப்பி வெளியேறும் பொதுமக்களிடம் விமான நிறுவனங்கள் குரூரமாக கட்டண கொள்ளையில் இறங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவை எஸ்டி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவு. இதற்கு பழங்குடிகளான நாகா, குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாகா, குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு மிகப் பெரும் வன்முறையாக வெடித்தது. மணிப்பூர் தலைநகர் இம்பால் தொடங்கி அத்தனை மாவட்டங்களிலும் வரலாறு காணாத பெரும் வன்முறை வெடித்தது. வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் என மைத்தேயி இன மக்கள் மற்றும் பிற மாநில மக்களை குறிவைத்து நாகா, குக்கி இன மக்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதல்களில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூர் வன்முறைகளில் சிக்கிய 23,000 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மணிப்பூர் வன்முறைகளில் மியான்மர் நாட்டு எல்லையில் வசிக்கும் தமிழ்நாட்டு தமிழர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மியான்மர் எல்லையில் உள்ள மோரே நகரில்தான் தமிழர்கள் வசிக்கின்றனர். அங்கு தமிழர்களின் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனால் மணிப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கான பிற மாநிலத்தவர் வெளியேறி வருகின்றனர். தலைநகர் இம்பால் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள இவர்கள் விமானங்களுக்காக காத்திருக்கின்றனர்.
இம்பாலில் இருந்து கொல்கத்தா, இம்பால்- குவஹாத்தி செல்லும் அனைத்து விமானங்களும் தொடர்ந்து நிரம்பி வழிகின்றன. இருந்தாலும் டிக்கெட் கிடைக்கும் வரை விமான நிலையத்திலேயே பிற மாநில மக்கள் காத்திருக்கின்றனர்.

இத்தகைய ஒரு அவலமான நிலையில் விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரை பணயம் வைத்து வன்முறையாளர்களிடம் இருந்து தப்பி வரும் இப்பொதுமக்களிடம் கொல்கத்தா செல்வதற்கு ரூ23,000 முதல் ரூ30,000 வரை கட்டணத்தை பறிக்கின்றன விமான நிறுவனங்கள்.
சாதாரண காலங்களில் இம்பால்- கொல்கத்தா விமான கட்டணம் அதிகபட்சமாக ரூ2,500 மட்டுமே. தற்போது 10 மடங்கு அதிகமாக விமான நிறுவனங்கள் கட்டணக் கொள்ளையில் இறங்கிவிட்டன. இது எத்தனை குரூரரமானது என குமுறுகின்றனர் பொதுமக்கள்.
இவ்வளவு தொகையை உடனடியாக கொடுத்து தப்பி வெளியேற முடியாதவர்கள் பெரும் தவிப்புடன் இம்பால் விமான நிலையத்தில் காத்திருக்கின்ற துயரமும் தொடருகிறது.












Click it and Unblock the Notifications