மத்திய அரசின் மணிப்பூர் அமைதிக் குழு- பாஜக முதல்வர் இடம்பெற எதிர்ப்பு- குக்கி இனக்குழு புறக்கணிப்பு!
இம்பால்: மணிப்பூர் இன வன்முறைகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள அமைதிக் குழுவில் பாஜக முதல்வர் பைரோன்சிங் மற்றும் அமைச்சர்கள் இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்குழுவில் இடம்பெற முடியாது என குக்கி இனக்குழுவினர் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அம்மாநில ஆளுநர் தலைமையில் மத்திய அரசு அமைதிக் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவில், மாநில முதலமைச்சர், சில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழுவில் முன்னாள் அரசு ஊழியர்கள், கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பல்வேறு இனக்குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.

சுமுகமான உரையாடல், முரண்படும் கட்சிகள்/குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைகள் உட்பட, மாநிலத்தின் பல்வேறு இனக்குழுக்களிடையே சமாதானத்தை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குவதே குழுவின் பணியாகும். சமூக ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே சுமுகமான தொடர்பை இக்குழு எளிதாக்க வேண்டும்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் மாநிலத்திற்குச் சென்று, நிலைமையை ஆய்வு செய்த பின்னர் அமைதிக் குழுவை அமைப்பதாக அறிவித்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த குழுவில் மணிப்பூர் பாஜக முதல்வர், அமைச்சர்கள் இடம்பெறுவதற்கு குக்கி இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆகையால் மத்திய அரசின் அமைதிக் குழுவை புறக்கணிப்பதாகவும் குக்கி இனக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கூடாது என்பது குக்கி இனக்குழுவினர் நிலைப்பாடு. இதனால் போராட்டங்களும் பின்னர் வன்முறைகளும் வெடித்தன. இந்த வன்முறைகளில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
இன்னமும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்மாநிலத்தில் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றார். 6 முக்கிய வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படும் எனவும் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications