மணிப்பூர் அதி உச்ச வன்முறை: பாஜக தலைவர்கள் வீடுகளை இலக்கு வைத்து தீ வைப்பு சம்பவங்கள் அதிகரிப்பு!
இம்பால்: மணிப்பூரில் இனமோதல்களின் அதி உச்சமாக பாஜக தலைவர்களின் வீடுகள் இலக்கு வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான மோதல்களில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் வடகிழக்கு மாநில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல் ஆயுதம் தாங்கிய தாக்குதலாக திசை மாறியுள்ளது. குக்கி இனக்குழுவினரைப் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என மைத்தேயி குழுவினர் வலியுறுத்தினர். இதற்கு எதிரான போராட்டம்தான் கடந்த ஒன்றரை மாத வன்முறையாக தொடருகிறது.

குக்கி மற்றும் மைத்தேயி இனக்குழுவினர் தற்போது ஆயுதங்களை ஏந்தி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இருதரப்பினரது வழிபாட்டு தலங்கள், வீடுகள் நூற்றுக்கணக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனால் இரு இனக்குழுவினரும் வாழ்விடங்களை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இதுவரையிலான மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 50,000க்கும் அதிகமானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மிசோரம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றனர்.
இந்நிலையில் மாநிலத்தில் ஆளும் பாஜக ஆட்சியின் பெண் அமைச்சர் வீடு, மத்திய அமைச்சர் வீடு ஆகியவற்றை 1,000க்கும் மேற்பட்ட வன்முறை கும்பல் ஒன்று சேர்ந்து தீ வைத்தது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பல பகுதிகளில் பாஜக தலைவர்கள், நிர்வாகிகளை இந்த வன்முறை கும்பல் இலக்கு வைத்து தீ வைப்பதாக வடகிழக்கு மாநில ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் சுமார் 50,000 பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் பாதுகாப்பு படையினருக்கும் வன்முறை கும்பல்களுக்கும் இடையே தொடர் மோதல் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர் அமித்ஷா மேற்கொண்ட அமைதி முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில் மணிப்பூர் வன்முறை, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவக் கூடிய அச்சமும் அங்கு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications