மணிப்பூர் வன்முறை: டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை- விளக்கம் தந்த அமித்ஷா!
டெல்லி: மணிப்பூரில் 2 மாதங்களாக நீடிக்கும் வன்முறைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி இன்று தமது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல்கள் 2 மாதங்களாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இரு இனக்குழுவினரும் தொடர்ந்து வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூரில் முகாமிட்டு அமைதி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மத்திய அரசும் அமைதிக் குழுவை அமைத்தது. ஆனாலும் வன்முறை கட்டுக்குள் அடங்காமல் தொடருகிறது. 2 மாதங்களாக மணிப்பூரில் இணையசேவை துண்டிக்கப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தின் முழுமையான உண்மை நிலவரம் வெளியே தெரியவும் இல்லை.
இந்நிலையில் அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா, அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திலும் மணிப்பூர் மாநிலத்துக்கு அனைத்து கட்சிக் குழுவை அனுமதிக்க வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. பிரதமர் மோடி தமது மன்கி பாத் வானொலி நிகழ்ச்சியில் கூட மணிப்பூர் பற்றி எதுவும் குறிப்பிடாதது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரேடியே பெட்டிகள் எரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தற்போது வெளிநாட்டு பயணங்களை நிறைவு செய்து நாடு திரும்பி உள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் இன்று தமது வீட்டில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரதமர் மோடியிடம் விவரித்தார். முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் மாநில முதல்வர் பைரேன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது மணிப்பூர் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வது தொடர்பான தனது கவலையை பைரேன் சிங்கிடம் அமித்ஷா பகிர்ந்து கொண்டார் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications