மோடி வீடு முற்றுகை: டெல்லி துணை முதல்வர் சிசோடியா, 65 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தடுத்து நிறுத்தம்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வீட்டை முற்றுகையிட சென்ற டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் 65 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் மத்திய அரசுக்குமான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. அண்மையில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் 14 மசோதாக்கள் உரிய வழிமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. தினேஷ் மோகனியாவை முதியவர் ஒருவர் தாக்கிய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் பிரதமர் மோடி டெல்லியில் அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டதாக முதல்வர் கேஜ்ரிவால் கடுமையாகத் தாக்கியிருந்தார்.
இதனிடையே டெல்லி காய்கறி விற்பனையாளர்களிடம் சர்வாதிகாரமாக நடந்து கொண்டதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால் சிசோடியாவும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை உருவானது.
இன்று காலை டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுடன் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தம்மை கைது செய்ய வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடி வீட்டை முற்றுகையிட 65 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுடன் துணை முதல்வர் சிசோடியா சென்றார். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.