அணை என்ற பெயரில் வெடிகுண்டை புதைக்கிறது கர்நாடகா... கோவா முதல்வர் பொளேர்!
கர்நாடகாவிற்கு நதிநீர் பங்கிட்டு கொள்வது குறித்து சிறிதும் தெரியவில்லை என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
பானாஜி: அணைகள் என்ற பெயரில் சுற்றுச்சூலை பாதிக்கும் வெடிகுண்டுகளை கர்நாடகா புதைப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா - மஹாராஷ்டிரா மாநிலங்களுடன் கோவாவுக்கு உள்ள நதிநீர் பங்கீடு பிரச்னை குறித்து கோவா மாநில சட்டசபையில் முதல்வர் மனோகர் பாரீக்கர் பேசினார். அப்போது கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவாவில் மஹாதேயி நதி ஓடுகிறது.
இந்த நதி நீர் கடைசியாக பானாஜி அருகே அரபிக் கடலில் கலக்கிறது. மஹாதேயி ஆற்றின் 78 சதவீத படுகைள் கோவாவில் அமைந்துள்ளன.
ஆனால் கர்நாடகாவும், மஹாராஷ்டிராவும் மகதாயி ஆற்றின் போக்கை திசை திருப்பும் வகையில் அணைகளை கட்டி வருகின்றன. இதனால் ஆற்று நீர் மாசடைவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
கர்நாடகா அணைகள் என்ற பெயரில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வெடிகுண்டுகளை புதைத்து வருகிறது. நதிநீர் பிரச்னைக்கு கட்சி ரீதியாக தீர்வு காண முடியாது. இது மாநிலங்களின் நலன் சம்பந்தப்பட்டது என்பதால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
கர்நாடகாவை பொறுத்தவரை பல மாநிலங்களுடன் அதற்கு நதிநீர் பங்கீடு பிரச்னை உள்ளது. நதிநீரை சிறப்பாக பங்கிட்டு கொள்வது குறித்து கர்நாடகாவிற்கு சிறிதும் தெரியவில்லை, அதுபற்றி அந்த மாநிலம் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.
நதிநீர் பிரச்னைகளில் கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை. மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்ப்பாயத்திடம் எடுத்துச் சென்றிருக்கிறோம். கோவா மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, என்றும் பாரிக்கர் தெரிவித்தார். ஆனால் அந்த திட்டத்தை சட்டடசபையில் அறிவிக்க மறுத்துவிட்டார்.