சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுள் தாக்குதல்- 11 போலீசார் பலி! 400 பேர் சரணடைவதாக அறிவித்ததற்கு பதிலடி?
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பஸ்தார் பகுதியில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 11 போலீசார் உயிரிழந்தனர். போலீசார் சென்ற வாகனம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பள்ளத்தாக்கு மாவோயிஸ்டுகளின் கோட்டையாகும். சத்தீஸ்கர், ஆந்திரா, ஒடிஷா 3 மாநில எல்லைகளை இணைக்கக் கூடிய மலைத் தொடர்களில் மாவோயிஸ்டுகள் கை ஓங்கியே இருக்கிறது.

ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திராவின் இந்த மலைப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்கள் சென்றடையாத வகையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் தாக்குதல் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்திருந்தது.
மாவோயிஸ்டுகளுக்கு பக்க பலமாக இருந்த ஆதி பழங்குடி இன மக்கள், மைய வாழ்க்கைக்கு திரும்பி அரசின் நல உதவிகளைப் பெற்று வருவது மிக முக்கியமான காரணமாகும். அதேநேரத்தில் இன்னமும் சத்தீஸ்கர், ஒடிஷா, ஆந்திராவின் தன்டகாருண்யா, தண்டேவடா வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கைக்காக பெருமளவு துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆண்டுதோறும் 400 மாவோயிஸ்டுகள் சரணடைந்து மாநில அரசின் உதவி பெற்று வாழ்வதாக அம்மாநில போலீசார் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டி விவாதப் பொருளாகி இருந்தது.
போலீசாரின் இத்தகைய பேட்டிகளுக்கு பதில் தரும் வகையில் மாவோயிஸ்டுகள் இன்று சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் பயங்கர தாக்குதல் நடத்தினர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். மேலும் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications