கேரளாவில் மாவோயிஸ்டுகள் மீண்டும் தாக்குதல்: கல்குவாரி அலுவலகத்தை சூறையாடி தீவைத்தனர்!
திருவனந்தபுரம்: கேரளாவின் கண்ணூரில் கல்குவாரி அலுவலகத்தை மாவோயிஸ்டுகள் தாக்கி சூறையாடியதுடன் தீ வைத்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு, மலப்புரம், கண்ணூர் மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர். இவர்களுக்கு எதிராக கேரளா போலீசாரின் 'தண்டர் போல்டு' படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மாதம் 22-ந்தேதி கோவை-கேரள மாநில எல்லையில் உள்ள முக்காலி வனத்துறை அலுவலகம் மீது மாவோயிஸ்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த ரோந்து ஜீப் மற்றும் சோதனை சாவடி பொருட்களை அவர்கள் தீ வைத்து எரித்தனர்.
பின்னர் அந்த கிராமத்தில் உள்ள மெக்டொனால்டு மற்றும் கே.எப்.சி. உணவகங்களையும் சூறையாடினார்கள். இத்தாக்குதலில் பெண்கள் உள்பட 19 மாவோயிஸ்ட்டுகள் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்களை பிடிக்க பாலக்காடு போலீஸ் சூப்பிரண்டு மஞ்சுநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், அருண் பாலன், ஸ்ரீகாந்த் என்ற 2 பேர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாவோயிஸ்டுகள் கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளை தாக்க திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை கண்ணூர் மாவட்டம் செக்காளியில் உள்ள 24-ம் மைல் பகுதியில் உள்ள கல்குவாரியில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு 5 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியது.
அவர்கள் குவாரியின் காவலாளியை தாக்கி அருகில் உள்ள மரத்தில் கட்டிப்போட்டனர். பின்னர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்களை உடைத்து நாசமாக்கினர். மேலும் அலுவலகத்தில் இருந்த பொருட்களை வெளியே வீசி எறிந்து தீ வைத்தனர்.
அப்போது மாவோயிஸ்ட் இயக்கத்தை வாழ்த்தி முழக்கங்கள் போட்டதுடன் அது தொடர்பான துண்டு பிரசுரங்களையும் அங்கு வீசி விட்டு சென்றனர்.
கல்குவாரி அலுவலகம் தீ பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் இதுபற்றி கண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாவோயிஸ்டுகளால் கட்டிப்போடப்பட்ட காவலாளியை விடுவித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் அடுத்தடுத்து நடத்திய இத்தாக்குதல் சம்பவங்கள் கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications