சத்தீஸ்கர்ரில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள்- அதிர்ச்சி தகவல்
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாவோயிஸ்டுகளின் இருப்பு அண்மைக்காலமாக கேள்விக்குறியாகி இருந்தது. மாவோயிஸ்டுகளின் வசமுள்ள வனப்பகுதிகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.
இதனால் மாவோயிஸ்டுகளுக்கு கடும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 2000 பாதுகாப்பு படையினர் சத்தீஸ்கரின் சுக்மா, பிஜாபூர் மாவட்டங்களின் வனப்பகுதிகளில் கூட்டாக தேடுதல் நடவடிக்கை மேற்கொன்டனர்.

மாவோயிஸ்டுகளுடன் மோதல்
ஜோனகுடா என்ற மாவோயிஸ்டுகளின் முக்கியமான இடத்தை பாதுகாப்பு படை வீரர்கள் நெருங்கினர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.

22 வீரர்கள் வீரமரணம்
இந்த மோதலில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 31 வீரர்கள் படுகாயமடைந்தனர். இதில் 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளன. இந்த சண்டையின் போது மாவோயிஸ்டுகள் இலகு மற்றும் கனரக ஆயுதங்கள், தானியங்கி துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.

மாவோயிஸ்டுகளின் ராக்கெட் லாஞ்சர்கள்
அத்துடன் ராக்கெட் லாஞ்சர்கள் மூலமாகவும் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். அதாவது மாவோயிஸ்டுகள் நவீன ஆயுதங்களுடன் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்கின்றனர் பாதுகாப்புப் படையினர்.

அமித்ஷா இரங்கல்
இதனிடையே சத்தீஸ்கரில் 22 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலை தொடர்பு கொண்டும் அமித்ஷா பேசினார். அதேபோல் சி.ஆர்.பி.எப். இயக்குநர் குல்தீப்சிங்கை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்யவும் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications