தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.100 கோடி.. காசோலையை அருண்ஜெட்லியிடம் வழங்கினார் மாதா அமிர்தானந்தமயி
கொல்லம் : மத்திய அரசின் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடிக்கான காசோலையை மாதா அமிர்தானந்தமயி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம் வழங்கினார்.
கடந்த மார்ச் மாதம் டெல்லி சென்றிருந்த மாதா அமிர்தானந்தமயி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். சுற்றுச்சூழல் நலத் திட்டங்களுக்காக மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுக்கு அப்போது மோடி பாராட்டு தெரிவித்தார்.
மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் "அமல பாரதம்' திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் மூலம் பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவை தொடர்பான நலத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான தன்னார்வலர்கள் பொது இடங்களை தூய்மைப்படுத்தும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாது, குப்பைகளை எறியக் கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வுப் பிரசாரங்களை பள்ளி மாணவர்களிடையே அமிர்தானந்தமயி மடம் மேற்கொண்டு வருகிறது. இதைத் தவிர ஆண்டுதோறும் பம்பை நதியைத் தூய்மைப்படுத்தும் பணியையும் மடத்தின் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசின் கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதியுதவிக்கான காசோலையை நேற்று மாதா அமிர்தானந்தமயி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் வழங்கினார்.