ஒற்றை வங்கிப் பரிவர்த்தனை வரி விதிப்பை ஏற்றால் காங்கிரஸுக்கு ஆதரவு: ராம் தேவ் அறிவிப்பு
டெல்லி: வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான ஒற்றை வரிவிதிப்பை ஏற்க மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முன்வந்தால், நான் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர முன்வருவேன் என்று யோகா குரு ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த அகில இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்ட்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியபோது இப்படித் தெரிவித்துள்ளார் ராம்தேவ்.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோத கொள்கைகள் நாட்டை சீரழித்துவிட்டன. மோடி பிரதமரானால், அனைத்து விதமான வரிகளை ரத்து செய்யவேண்டும். வங்கி பரிவர்த்தனை வரி வடிவில் ஒரே வரியாக கொண்டுவரவேண்டும் எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார் யோகா குரு பாபா ராம்தேவ்.
இந்நிலையில், தற்போது தனது வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான ஒற்றை வரிவிதிப்பு வேண்டுகோளை ஏற்றுக் கொண்டால் ஆதரவு அளிப்பதாக தூது அனுப்பியுள்ளார் ராம் தேவ். மேலும் இது குறித்து அவர் பேசியதாவது :-
ஆதரவு தர சம்மதம்....
" வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான ஒற்றை வரி விதிப்பை காங்கிரஸ் கட்சி ஏற்க முன்வர வேண்டும். அப்படி முன்வந்தால் நானும் அக்கட்சியை நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரிக்க முன்வருவேன். நாங்கள் ஆதரவு தரத் தயார். ஆனால் அவர்கள் முதலில் இந்த நடவடிக்கையை எடுக்கட்டும்.
பொருளாதார குளறுபடிகளுக்கு தீர்வு...
நாடு தற்போது பொருளாதார குளறுபடியில் சிக்கித் தவித்து வருகிறது. வரி விதிப்பு தீவிரவாதம் நாட்டை ஆட்டிப்படைக்கிறது. இந்த வங்கிப் பரிவர்த்தனை வரிவிதிப்பு பெரும் சிக்கலாக மாறி வருகிறது. அதற்குப் பதிலாக அனைத்து வங்கிகளுக்கும் பொதுவான ஒற்றைப் பரிவர்த்தனை வரிவிதிப்புத் திட்டத்தை அமலாக்கலாம். இது மக்களுக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.
லோக்சபா தேர்தலைப் பாதிக்கும்...
அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் ஒரே மாதிரியான வரிவிதிப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். வரும் லோக்சபா தேர்தலில் இது ஒரு பிரச்சினையாக நிச்சயம் எழுப்பப்படும். இந்த ஒற்றை வரி விதிப்பு முறையால், எல்பிஜி சிலிண்டர் விலை குறையும், பெட்ரோல் விலையும் குறையும். மக்கள் மீதான வரிவிதிப்பு சுமையும் குறையும்.
பாஜக ஆதரவு....
எனது இந்த யோசனை குறித்து பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோருடனும் பேசியுள்ளேன். அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.