கொளத்தூர் மணி மீதான தே.பா சட்டத்தை ரத்து செய்ய உள்துறை அமைச்சருக்கு மதிமுக கோரிக்கை
டெல்லி: திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மதிமுக எம்.பி அ.கணேசமூர்த்தி உள்துறை அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
கடந்த மாதம் சேலம், மற்றும் சென்னையில் மத்திய அரசு அலுவலங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தில் திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கட்சியினர் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் கொளத்தூர் மணி மீது தேசிய பாதுகாப்புச்சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச்சட்டத்தினை ரத்து செய்யக் கோரி உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவிடம் தொலைபேசி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.
மறுமலர்ச்சி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டோவை நேரில் சந்தித்து வைகோ எழுதிய கடிதத்தையும் உள்துறை அமைச்சரை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்.
அப்போது அவர் பிரச்சினையை விளக்கமாக எடுத்துக் கூறி, கொளத்தூர் மணி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை இரத்துச் செய்யக் கோரிக்கை விடுத்தார். அதற்கு உள்துறை அமைச்சர் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்வதாக உறுதி அளித்தாக கணேசமூர்த்தி கூறினார்.