மீரட் வன்முறை- பாஜக எம்.எல்.ஏ. மனைவி, சகோதரர் உட்பட 3600 பேர் மீது வழக்கு!!
மீரட்: மீரட் வன்முறைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ சங்கீத் சோம் மனைவி, சகோதரர் உட்பட 3,600 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் இருபிரிவினரிடையே நிகழ்ந்த மோதலில் 49 பேர் பலியாகினர். 40 ஆயிரம் பேர் அகதிகளாகினர். இம்மோதல் தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ..சங்கீத் சோம் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சங்கீத் சோம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீரட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் பலர் தாக்கப்பட்டனர். வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிறையில் இருக்கும் பாஜக எம்.எல்.ஏ. சங்கீத் சோமின் மனைவி, சகோதரர் மற்றும் 3,600 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே உத்தரப்பிரதேச மாநில அனைத்து காவல்நிலையங்களிலும் 3 முஸ்லிம்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவரை சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
இதை ஏற்று மாநிலம் முழுவதும் அனைத்து காவல்நிலையங்களில் முஸ்லிம்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்வோம் என்று அம்மாநில காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications