பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வலியுறுத்தல்
டெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பொதுத்துறை வங்கிகளை இணைக்க வேண்டியது அவசியமாகும் என்று இந்திய வங்கித்துறை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
இந்த யோசனையை நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவரான ராஜீவ் குமார் முன் வைத்துள்ளார். மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த நிபுணர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ராஜீவ் குமார் பேசுகையில், இந்திய வங்கித் துறை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் இணைக்க வேண்டியது முக்கியமானது.
இந்திய வங்கித் துறை பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. அதிலிருந்து அவற்றை மீட்க வங்கிகளை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் வங்கிகளின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும். வங்கிகளை முறைப்படுத்தி, 2 அல்லது 3 வங்கிகளாக அவற்றை இணைக்க வேண்டும். தற்போது 24க்கும் மேற்பட்ட வங்கிகளாக பொதுத்துறை வங்கிகள் பிரிந்து கிடக்கின்றன.
வங்கித் துறையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். வங்கித் துறையை அரசு தனது கைக்கு எட்டும் தூரத்திற்குள் கொண்டு வர வேண்டும். அது பொதுத்துறையாக இருந்தாலும் சரி, வெளிநாட்டு வங்கிகளாக இருந்தாலும் சரி என்றார் ராஜீவ் குமார்
இந்த கூட்டத்தின்போது நாட்டின் வளர்ச்சியை மிகப் பெரிய அளவில் கொண்டு செல்ல வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. பொதுத்துறை வங்கி ஒன்றின் இயக்குநர் பேசுகையில், வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க என்ன சீர்திருத்தம் தேவையோ அதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் மேலும் பேசுகையில், உலகின் டாப் 10 நிறுவனங்களில் நமது ஒரு வங்கி கூட இல்லை. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 250-300க்குள் தான் இருக்கிறது. ஆனால் டாப் 100க்குள் 7 சீன வங்கிகள் உள்ளன. இப்படி இருந்தால் நம்மால் எப்படி வேகமாக வளர முடியும்.
உலக வங்கி கொடுக்கும் கடன் தொகையை விட 2 சீன வங்கிகள் தரும் கடன் தொகையானது அதிகமாக இருக்கிறது. 2030க்குள் நாம் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உயர வேண்டும் என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வங்கித் துறையை சீர்திருத்தாமல் அதை சாதிப்பது கடினம். பொதுத்துறை வங்கிகளை இணைப்பது குறித்து பேசி முடிவெடுக்க இதுதான் சரியான தருணம் என்றார் அவர்.
கோபால கிருஷ்ண அகர்வால் முன்னதாக பேசுகையில், தனது துணை வங்கிகளை இணைப்பது குறித்த நடவடிக்கைகளை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தொடங்கியுள்ளது. விரைவில் அது முடிவடையும் என்றார்.
இதேபோல மேலும் பல வங்கிகளை இணைப்பது தொடர்பான விவாதங்கள் நீண்ட காலமாகவே உள்ளன. ஆனால் உறுதியான நிலைப்பாடு எட்டப்படவில்லை. இந்திய வங்கித்துறை மாநாட்டில் இதுதொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் நிதி ஆயோக் சார்பில் மத்திய அரசிடம் அளிக்கப்படவுள்ள அறிக்கையிலும் கூட இதுகுறித்து முக்கியமாக இடம் பெறும் என்றும் தெரிகிறது.