ஸ்ரீநகரில் விமானப் படைக்கு சொந்தமான மிக்21 விமானம் விபத்து- விமான சேவைகள் ரத்து
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமான படைக்குச் சொந்தமான மிக்21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓடுபாதை சேதமடைந்ததால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படை விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விமான விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ராஜஸ்தானின் பர்மர் அருகே உள்ள உத்தர்லாய் விமான தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானப் படையின் மிக்-21 ரக போர் விமானம் இன்று தரையிறங்கிய போது விபத்துக்குள்ளானது. அப்போது பாதுகாப்பாக விமானி விமானத்தை விட்டு வெளியேறினார்.
இருப்பினும் ஓடுபாதை சேதமடைந்தது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.