எடப்பாடியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.. “பொய் என நிரூபிப்போம்”.. அமைச்சர் பெரியகருப்பன் ஆவேசம்!
தென்காசி : உள்ளாட்சி நிதியை திருப்பி அனுப்பும்படி தமிழக அரசு கூறியதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் சாடியுள்ளார்.
தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநரையும் சந்தித்து புகார் அளித்தார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி குற்றச்சாட்டு
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார். அப்போது திமுக அரசு மீதான புகார்களை அளித்துள்ளார் ஈபிஎஸ். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிலிருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த விளம்பரப்படுத்தப்படும் பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இதை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் மெகா ஊழல் நடந்திருக்கிறது எனக் குற்றம்சாட்டினார்.

அமைச்சர் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அரசு திட்டங்கள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, கடையநல்லூர் அருகே உள்ள நயினாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சமத்துவபுரத்தில், மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரியகருப்பன், அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அனைத்து துறைகளும்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எதிர்காலங்களில் இன்னும் அதிகமான சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர்கள், துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்களை ஒருங்கிணைத்து முதல்வர் திட்டமிட்டு செயல்பட்டு வருவதால் அனைத்து துறைகளும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

பொய் குற்றச்சாட்டு
4 வருடங்களுக்கு மேல் முதல்வராக பணியாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை. ஆனால், போகிற போக்கில் ஏதாவது குற்றச்சாட்டுகளை பதிவிட வேண்டும் என்பதற்காகவே அவர் பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குறிப்பாக, ஊராட்சிகள், ஒன்றியங்களின் நிதியை திருப்பி அனுப்பும்படி தமிழக அரசு கூறியதாக அவர் புகார் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.

ஆதாரங்களோடு நிரூபிப்போம்
அமைச்சராக, ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் இப்படி கூறக்கூடாது. எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களை நாங்கள் கண்டிப்பாக சமர்ப்பிப்போம்" என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications