குற்றவாளி சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை பெறுவதில் தப்பில்லை - சுப்ரீம் கோர்ட்
சிறை தண்டனை பெற்ற சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை பெறுவதில் தவறேதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லி: சசிகலாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி வசீகரன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சிறை தண்டனை பெற்ற சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை பெறுவதில் தவறேதும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் தண்டனையில் இருக்கிறார். சிறையில் இருந்தாலும் அவரே அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்து இருந்து வருகிறார். அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் அவ்வப்போது அவரை சிறையில் சென்று சந்தித்து முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
அ.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக பெங்களூரு சென்று சசிகலாவின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முடிவுகளை அறிவிக்கிறார்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், உச்ச நீதிமன்றத்தில், 'சசிகலா அ.தி.மு.க பொதுச் செயலாளராக நீடிக்கத் தடை விதிக்கக்கோரி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 'சசிகலா அறிவுறுத்தலின்படி முதல்வர், அமைச்சர்கள் செல்படுவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
குடியரசுத்தலைவர் வேட்பாளரை ஆதரிக்க சசிகலாவை ஆலோசித்ததாகக் கூறும் ஆளுங்கட்சியின் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நீடிக்க தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தண்டனை பெற்றவர் கொலை குற்றவாளியாகவே இருந்தாலும் அவர் அறிவாளியாக இருந்தால் அவரிடம் ஆலோசனை பெறுவதில் தவறேதும் இல்லை என்று கூறினார்.
சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள், எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் ஆலோசனையை பெறுவதில் தவறு இல்லை என்று கூறி வசீகரனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.