திருமண வீட்டிலிருந்து காட்டுக்கு தூக்கி சென்ற கொடூரம்.. 7 பேராக சேர்ந்து பலாத்காரம்.. சிறுமி தற்கொலை
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் சிறுமி ஒருவர் 7 பேர் கொண்ட வெறியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள அண்டைய கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு மது போதையில் 2 பேர் கொண்ட கும்பல் அவரை அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு தூக்கிச் சென்றனர்.

அங்கு மேலும் 5 பேர் வந்தனர். மொத்தமாக 7 பேர் கொண்ட கும்பல் பல மணி நேரமாக அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம் என அந்த 7 பேரும் மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த சிறுமியை திருமணம் நடந்த இடத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டனர். இதையடுத்து தனது பெற்றோரிடம் கூட சொல்லாமல் அந்த சிறுமி அவளது கிராமத்திற்கு சென்றுவிட்டார்.
இதனிடையே அந்த பெண் ஜூலை 20-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும் இந்த விவரத்தை தனது நண்பரிடம் தெரிவித்திருந்தார். அவர் பல நாட்கள் கழித்து இந்த விவகாரத்தை சிறுமியின் குடும்பத்தினரிடம் சொல்லியுள்ளார்.
இதை கேட்ட அந்த குடும்பத்தினர் போலீஸாரிடம் செல்லவில்லை. மாறாக அந்த சிறுமியின் தந்தை பூச்சிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். எனினும் அவர் காப்பாற்றப்பட்டார். இதையடுத்து இந்த தற்கொலை முயற்சி குறித்து போலீஸாருக்கு தெரிந்ததால் அவர்கள் விசாரணை நடத்தியதில் தனது பெண்ணுக்கு நடந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications