பிணைக் கைதியாக ஒரு சி.ஆர்.பி.எப். வீரர்.. துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம்- மாவோயிஸ்டுகள் உறுதி
சுக்மா: சத்தீஸ்கர் மோதலில் மாயமான சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் தங்களிடம் பிணைக் கைதியாக இருப்பதாகவும் அவரை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம் என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா-பிஜப்பூர் மாவட்ட எல்லைகளில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை தேடி பாதுகாப்பு படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே பல மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில் 15 முதல் 20 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் வீரமரணம் அடைந்தனர். 31 பேர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே இந்த மோதலின் போது சி.ஆர்.பி.எப். வீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் காணாமல் போனார். அவரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடிய போதும் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில்தான்ன் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் தங்களிடம் பிணைக் கைதியாக இருப்பதாகவும் அவரை துன்புறுத்தாமல் விடுதலை செய்வோம் என்றும் மாவோயிஸ்டுகள் தரப்பில் இருந்து சத்தீஸ்கர் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். பிணைக் கைதியாக பிடிபட்ட ராகேஷ்வர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.