என்ன இப்படி அசிங்கமாகுதே..மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரமா? மறுத்த மிசோரம் முதல்வர்- காரணம் 'அதுதான்'!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முடியாது என ஆளும் மிசோ தேசிய முன்னணியின் தலைவரும் முதல்வருமான ஜோரம்தங்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது பாஜகவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் அக்டோபர் 20-ந் தேதி முடிவடைந்தது.

மிசோரம் கள நிலவரம்: மிசோரம் மாநிலத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் மற்றும் பாஜக ஆகியவை களத்தில் உள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் மிசோ தேசிய முன்னணி இடம் பெற்றுள்ளது. ஆனால் தற்போதைய சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து விலகி நிற்கிறது மிசோ தேசிய முன்னணி. மிசோரம் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைதான் சாத்தியம் என்கின்றன பெரும்பாலான கருத்து கணிப்புகள். இதனால் காங்கிரஸுடன் இணைந்த கூட்டணி அரசுக்கு சாத்தியம் எனவும் யூகிக்கப்படுகிறது.
மணிப்பூர் வன்முறை: 6 மாதங்களாக வன்முறை தொடரும் மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ள குக்கி இன மக்களும் மிசோரம் பூர்வகுடிகளும் தொப்புள் கொடி உறவானவர்கள். இதனால் குக்கி இன மக்கள் பக்கமே ஒட்டுமொத்த மிசோரமும் இணைந்து நிற்கிறது. மணிப்பூரில் குக்கி இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது, தேவாலயங்கள் எரிக்கப்பட்ட போதும் மத்திய அரசு தலையிடவில்லை; பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று ஆறுதல் கூறவில்லை என்கிற ஆதங்கம் மிசோரம் மக்களிடமும் இருக்கிறது.
மோடி பிரசாரம்: இந்த காரணங்களால்தான் தற்போதைய சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பாஜகவிடம் இருந்து மிசோ தேசிய முன்னணி விலகியே நிற்கிறது. இதனிடையே வரும் 30-ந் தேதி மிசோரமில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோடியுடன் பிரசாரம் இல்லை: ஆனால் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார மேடையில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தாம் பங்கேற்க மாட்டேன் என மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா அறிவித்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மிசோரம் முதல்வர் விளக்கம்: இது தொடர்பாக பிபிசிக்கு அளித்த பேட்டியில், மிசோரம் மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் குக்கி இன மக்களின் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை மைத்தேயி இனக்குழுவினர் எரித்தனர். மிசோ இன மக்களை இது புண்படுத்தி இருக்கிறது. இத்தகைய தருணத்தில் பாஜகவுக்கு அனுதாபம் காட்டுவது என்பது என்னுடைய மிசோ தேசிய முன்னணிக்கு மிகப் பெரும் பின்னடைவாகிவிடும். அதனால் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்யப் போவதில்லை என தெரிவித்துள்ளார் முதல்வர் ஜோரம்தங்கா.












Click it and Unblock the Notifications