மிசோரம்: பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏக்கு ஊழல் வழக்கில் ஓராண்டு ஜெயில்- கூட்டாளிகள் 13 பேருக்கும் சிறை!
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏ.வான புத்த தன் சக்மாவுக்கு ஊழல் வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் பாஜகவின் ஒரே ஒரு எம்.எல்.ஏவாக இருப்பவர் புத்த தன் சக்மா. இவர் Tuichawng சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

புத்த தன் சக்மா, சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சிலின் 12 பேர் இணைந்து ஆளுநரிடம் அனுமதி பெறாமல் ஊதியத்தை முன்கூட்டியே எடுத்தது, பொது பணிகளில் முறைகேடு செய்தது என்பது வழக்கு. இவ்வழக்கில் 13 பேரும் குற்றவாளிகள் என உள்ளூர் நீதிமன்றம் கடந்த 22-ந் தேதி தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் 13 பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும் ரூ10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மிசோரம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குவஹாத்தி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக புத்த தன் சக்மா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து 13 பேருக்கும் 90 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.
இந்த ஊழல் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சக்மா கூறியதாவது: சக்மா தன்னாட்சி மாவட்ட கவுன்சில் உறுப்பினராக இருந்த காலத்தில் நிதி சுமை இருந்தது. அதனால் ஊதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெற்றோம். ஆனால் சட்டப்படிதான் இதனைப் பெற்றிருந்தோம். சர்ச்சைக்குரிய பணத்தை நாங்கள் செலுத்திய பின்னரும் வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக பொதுமக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தவில்லை. இவ்வாறு சக்மா கூறினார்.
மற்றொரு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் பாஜக துணைத் தலைவர் மரக், பிரமாண்ட விபசார விடுதி நடத்திய வழக்கில் தேடப்பட்டு வருகிறார். மேகலாயாவில் போலீசார் கைது செய்வார்களோ என அஞ்சி அவர் டெல்லியில் தஞ்சமடைந்துள்ளார். இந்த நிலையில் மிசோரமில் ஒரே ஒரு பாஜக எம்.எல்.ஏ.வும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications