மிசோரமில் 50 வயது நபருக்கு கொரோனா தொற்று- வடகிழக்கில் 2-வது நபருக்கு பாதிப்பு
அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் 50வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று நோய் பாதித்த 2-வது நபர் இவர்.
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 600ஐ எட்டுகிறது. இந்த கொடூர கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் திடீரென அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்களுக்கு லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இதனிடையே வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில் 50வயது நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து நாடு திரும்பிய அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கொரோனா தொற்று நோய் அவரை பாதித்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலத்தில் தற்போது 2-வது நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏற்கனவே மணிப்பூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது மார்ச் 21-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உயிரி மருத்துவப் படிப்பு மாணவியான அவர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவர். தற்போது 2-வதாக மிசோரமில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications