எம்.எல்.ஏக்களை கூட்டி வைத்து மிரட்டிய அகிலேஷ் யாதவ்.. பணிந்த முலாயம் சிங்
லக்னோ: சமாஜ்வாதி கட்சியிலிருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து அக்கட்சி தலைவரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் உத்தரவிட்டிருந்த நிலையில், பதிலுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தினார் அகிலேஷ் யாதவ்.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது. குறிப்பாக நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது. இந்நிலையில்தான், 6 வருடங்களுக்கு கட்சியிலிருந்து, அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களோடு அகிலேஷ் யாதவும், முலாயம் சிங்கும் இன்று காலை ஆலோசனைகளில் ஈடுபட்டனர். முலாயம் சிங் வரும் 2017 பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்களோடு ஆலோசனை நடத்திய நிலையில், எம்.எல்.ஏக்களுடன் அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
இதில் 150க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.எல்.சிக்கள் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அகிலேஷ் யாதவுடன் ஆலோசனை நடத்தினர். கட்சியின் மூத்த தலைவர் அசாம் கான் முலாயம் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியோ, அகிலேஷை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவு அவருக்கு இருப்பதாக தெரிவித்தார்.
தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலத்தை காட்ட அகிலேஷ் யாதவ் இந்த மீட்டிங்கை நடத்தினார். எனவே தந்தைக்கு எதிராக அவர் தோள் தட்டி எதிரே நிற்பது தெளிவானது. இந்த நிலையில்தான் மதியம் 2 மணியளவில் அகிலேஷ் யாதவை சஸ்பெண்ட் செய்த உத்தரவை முலாயம் வாபஸ் பெற்றார். அகிலேஷ் மிரட்டியே காரியத்தை சாதித்துவிட்டார்.












Click it and Unblock the Notifications