நவராத்திரி விழாவில் மோதல்: பீகார் அமைச்சரை உயிரோடு எரித்துக்கொல்ல முயற்சி - 6 பேர் கைது
பாட்னா: பீகாரில் நவராத்திரி விழாவில் கலந்து கொண்ட அம்மாநில அமைச்சரை, மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்துக் கொல்ல முற்பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் பகுதியில் தரசாண்டி கோவில் உள்ளது. நவராத்திரி விழா கொண்டாட்டம் காரணமாக கடந்த திங்களன்று மாலை அந்த கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில், அம்மாநில அமைச்சர் வினய் பீகாரி, அம்மாவட்ட நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாட்டுப்புற பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, அப்போது மைக் கோளாறு காரணமாக அக்கலை நிகழ்ச்சி அங்கு கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று வன்முறையில் இறங்கியது.
விழா மேடையை நோக்கி கற்கள் மற்றும் நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது நாற்காலி ஒன்று போலீஸ் சூப்பிரண்டு மேல் விழுந்ததில், அவர் பலத்த காயமடைந்தார்.
வன்முறையைக் கட்டுப் படுத்த போலீஸ் முயற்சித்துக் கொண்டிருந்த போது, அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி அமைச்சரை உயிரோடு எரித்துக் கொல்ல முயற்சித்தது. ஆனால், அப்பெட்ரோல் குண்டுகள் மேடையின் வேறு பகுதியில் விழுந்ததால், அமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே அமைச்சரின் அரசு வாகனத்தையும் அக்கும்பல் தீ வைத்து எரித்தது. இதனால், தீப்பற்றி எரிந்த மேடையிலிருந்து அமைச்சர் உள்ளிட்டோரைப் பாதுகாப்பாக மாற்று வாகனம் மூலம் போலீசார் வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் என்று சந்தேகிக்கப்படும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பெட்ரோல் கலந்த பாட்டீல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அடையாளம் தெரியாத 500 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.